தமிழும் மலேசியர்களும்! உண்மை வரலாறு

தமிழ் ஆட்சி மொழியாகத் தொடரும் என - சிங்கப்பூர் அரசு அறிவித்துள்ளது.சிங்கப்பூரை உருவாக்கியதிலும், அதன் மேம்பாட்டிலும் தமிழர்களின் பங்கு அளப்பரியது எனவும், அதனால்தான் சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக உள்ளது எனவும் அந்நாட்டு அமைச்சர் கூறியுள்ளார்.இன்றுவரை, அந்நாட்டுப் பள்ளிகளில் தமிழ் பயிற்றுவிக்கப்படுகிறது.சிங்கப்பூர் மட்டும் அல்ல, மலேசிய அரசின் தரவுகளின்படி, அந்நாட்டு மக்கள்தொகையில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள் சுமார் 8%. அந்த 8% பேரில் சுமார் 95% பேர் தமிழர்கள்.இன்றைய சிங்கப்பூருக்கும், மலேசியாவுக்கும் தமிழின் அன்றைய தொடர்பு என்ன என்பதின் வரலாற்றை தெரிந்துகொள்வோம்!


1965-ல் மலேசியாவில் இருந்து சிங்கப்பூர் பிரிந்து வருவதற்கு முன்பு வரை இரு நாடுகளும் ஒன்றாகவே இருந்தது!
மலேசியத் தமிழர் எனப்படுவோர் தமிழ் பின்புலத்துடன் மலேசியாவில் வசிக்கும் தமிழர்கள். இன்று மலேசியாவில் ஏறத்தாழ 1.5 மில்லியனுக்கு மேற்பட்ட தமிழர்கள் வாழ்கிறார்கள். தொன்று தொட்டே மலேசிய நிலப்பகுதிகளுக்கும் தமிழர்களுக்கும் தொடர்புகள் உண்டு. ஆம்!

11ம் நூற்றாண்டில் சோழ அரசன் இராஜேந்திர சோழன் “கடாரம்” எனப்படும் இடத்தைப் போரில் வென்றதற்கான வரலாற்று ஆதாரங்கள் உள்ளன.இதனால் தான் கடாரம் வென்ற சோழன், கடாரம் கொண்டான் என்ற பெயர்கள் ரஜெந்திரசொழனுக்கு இருந்தது. சுமத்திரா மற்றும் மலாயாத் தீபகற்பத்தில் சோழர்களால் தொடர்ச்சியான படையெடுப்புகள் மேற்கொள்ளப்பட்டன. சோழர்களின் வருகையும் போர்களும் முன்பு அங்கு ஆட்சிசெய்துகொண்டிருந்த ஸ்ரீவிஜய ஆட்சியை வலுவிழக்கச்செய்தது.ரசேந்திர சோழனுடைய படையெடுப்பிற்குப் பின் அங்கு தமிழர்களின் வளர்ச்சி மோலோங்கியது.  சோழர்களின் காலத்தில் வணிகம் ரீதியாக மலாயா வந்துபோன தமிழர்கள் அதன் பின் நடந்த படையெடுப்பு, போர், ஆட்சிமாற்றம் என காலம் ஓடியதில் மாற்றங்கள் ஏற்பட்டது. இன்றைய மலேஷியா அன்றைக்கு மலாயா என்று அழைக்கப்பட்டது.
தமிழர்கள் கொத்தடிமைகளாய் மலாயாவுக்குக் கொண்டு வரத்தொடங்கியக் காலம் பதினெட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதி என்று சொல்லலாம். நீராவிக் கப்பலில் பல இன்னல்களோடும் கொடுமைகளோடும் பயணித்து மலாயா வருவார்கள்.. அக்காலக்கட்டத்தில் மலாயாவில் நல்ல துறை முகங்கள் கிடையாது. விளை நிலங்கள் என்று சொல்லப்படும் தோட்டங்கள் கிடையாது. பழமரங்களும் சிறு தென்னந்தோப்புகளுமே அங்கே நின்றிருந்தன. இவற்றிற்குப் பின்னால் அடர்ந்த பெருங்காடுகளே கண்களுக்கு தெரிந்தன.

மலாயா மண்ணில் நம் மூதாதையர்கள் கால் பதித்த போது அவர்கள் கண்ட மலாயா இதுதான்! ஆறு, கடல் ஓரங்களில் நீண்ட சதுப்புநிலக் காடுகளும் உள்பகுதியில் நெடிந்து வளர்ந்து வானளவில் உயர்ந்து நின்ற 'கருங்காடு' எனப்படும் அடர்ந்த காடும் மலாயா முழுமையும் பரந்து கிடந்தது. ஆங்கிலேய நிறுவனங்கள் இக்காடுகளைக்கூறுபோட்டுக்கொண்டு தோட்டங்கள் ஆக்கும் முயற்சியில் இறங்கின. புலி, கரடி, யானை போன்ற காட்டு விலங்குகள்; பாம்பு, பூரான், குளவி போன்ற நச்சுப் பிராணிகள்; வித விதமான கொசுக்கள்; இரத்தம் குடிக்கும் அட்டைப் பூச்சிகள் இக்காட்டுக்குள் மலிந்து கிடந்தன. தமிழர்களின் வாழ்க்கை இத்தகைய கொடிய காட்டுக்குள் தான் அன்று தொடங்கியது. மனித இனத்தின் காலடிபடாத இக்காடுகளில் தமிழனின் காலடிதான் முதன் முதலில் பதிந்தது. காட்டுக்குள் வணிக நிலையங்கள் இல்லாத ஒரு சூழல்; இந்த நிலையில் அந்தந்தத் தோட்ட நிர்வாகமே மக்களுக்கு அத்தியாவசியத் தேவையான அரிசி, பருப்பு போன்ற பொருள்களைக் கொண்டு வந்து பங்கீடு செய்து வந்தது.ஆரம்பக்காலத்தில் தோட்டங்களில் கரும்பு, தென்னை, காப்பி, அன்னாசி போன்ற பயிர்களே விளைவித்தனர். பின் மலையும் மடுவும் பாறைகளும் நிறைந்த மலாயா பூமியைச் செம்மைப்படுத்தி சாலைகளையும் தொடர் வண்டிகளையும் அமைத்துக் கொடுத்தது தமிழர்களே என்பதை எவர் மறுத்துல் இயலும்?

காலப் போக்கில் செம்பனை, இரப்பர், தேயிலை போன்ற பயிர்கள் அறிமுகமாயின. இரப்பரின் வருகைக்குப் பிறகு 'சஞ்சிக்கூலிகள்' என்ற பெயரில் தமிழர்கள் அசுர வேகத்தில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தனர்.மலாயாவில் காசும் பணமும் கித்தா மரத்தில் காய்ச்சுத் தொங்குகிறது’ எனும் ஆசை வார்த்தைகளை நம்பிய தென்னிந்திய மக்கள், மலாயாவுக்குள் ஆயிரக்கணக்கில் அழைத்து வரப்பட்டனர்.  கித்தா மரம் என்பது ரப்பர்மரமாகும். மலேசிய வரலாற்றில் சஞ்சிக்கூலிகள் என்பது ஒரு துயர அத்தியாயத்தின் முதல்பக்கம்.தங்களைக் குபேரர்களாக்கிக் கொள்வதிலேயே தோட்டத்துரைமார்கள் குறியாய் இருந்தனர். ஏழை உழைப்பாளிகளின் நலனில் சிறிதும் அக்கறை எடுத்துக் கொள்ளமல் அவர்களைமேலும் மேலும் வருத்தி, கசக்கிப் பிழிந்து கொண்டிருந்தனர் அவர்கள்.



இவ்வாறு தமிழ்மக்களுக்கு இப்பரங்கியர் இழைத்த கொடுமைகள் இந்திய நாட்டினருக்கும் எட்டியிருக்கின்றது. இதனை, பாரதியாரின் அவர் பாடல்களில்...

"கரும்புத்தோட்டத்திலே – அவர் கால்களும்
கைகளும் சோர்ந்து விழும்படி""தெய்வமே!
நினது எண்ணம் இறங்காதோ - அந்த ஏழைகள்
 சொரியும் கண்ணீர்!"
"நாட்டை நினைப்பாரோ? – எந்த நாளினிப் போயதைக் காண்பதென்றே?அன்னை வீட்டை நினைப்பாரோ? - அவர்
விம்மி விம்மி விம்மி விம்மியழுங்குரல்
கேட்டிருப்பாய் காற்றே!.........." 

என்று வேற்று நாடுகளில் வேதனைப்பட்ட தமிழ்மக்களுக்குக் கண்ணீர் விட்டழுத ஒரே தமிழ்கவிஞர் இந்த மகாகவி பாரதியார் மட்டுமே!



1929-இல் தந்தை பெரியார் மலாயா நாட்டிற்கு வருகை புரிந்தார். அதன் பிறகு மலாயாத் தமிழர்களின் வாழ்வில் புதிய வேகமும் புதிய சிந்தனை மாற்றமும் உருவாகின. மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. புதிய இலக்கியப் போக்குகள் தோற்றம் கண்டன. நகர்ப்புற மக்களிடம் மட்டும் அல்லாமல் தோட்டப்புறங்களிலும் பெரியாரின் சிந்தனைகளும் பேச்சுகளும் புதிய உத்வேகத்தை ஏற்படுத்தின.பொரியாரின் வருகை மலேசியத் தமிழர்களின் வாழ்வில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. சஞ்சிக்கூலிகளாகத் தமிழக மண்ணிலிருந்து மலாயாவுக்கு ஆங்கிலேயர்ளால் கொண்டுவரப்பட்ட தமிழர்கள் காட்டையும் மேட்டையும் திருத்தினார்கள். ரப்பரைப் பயிரிட்டு நாட்டுக்கு வளத்தைத் தேடித் தந்தார்கள். ஆனால், அவர்களின் வாழ்வில் உயர்வுகள் எதுவும் ஏற்படவில்லை. மாதச் சம்பளத்திற்கும் அடிப்படை வசதிகளுக்காகவுமே போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.பின் 1937ல் "சஞ்சிக்கூலி" முறை தடை செய்யப்பட்டு ஒழிக்கப்பட்டது.இரண்டாவதாக யுத்தம் வந்தது. மலாயாவைச் ஜப்பானியர் பிடித்துக் கொண்டனர். 1942- முதல் 1945 ஆகஸ்டு வரை தமிழர்கள் வாழ்ந்திருந்த நிலை இரண்டாவது சோகக் கதை!



இக்காலக் கட்டத்தில்தான் ஜப்பானிய அரசு சயாம்- பர்மா மரண இரயில் பாதை அமைத்தது. இந்தியர்களை வண்டி வண்டியாய் அள்ளிக் கொண்டு போய் சயாமியக் காட்டில் கொட்டி வேலை வாங்கியது ஜப்பானிய அரசு. இம்முயற்சியில் லட்சத்துக்கும் மேலானவர்கள் சயாமியக் காடுகளில் புதையுண்டு போயினர். 1945 ஆகஸ்டில் ஜப்பான் சரணடைந்தது. வெள்ளைக்காரர்கள் படை வந்து சேர ஆனா இடைப்பட்ட இரண்டு வாரம் காலத்தில் காட்டுக்குள் இருந்த கம்யூனிஸ்ட் படைகள் நாட்டுக்குள் வந்து ஆட்சியைக் கையில் எடுத்துக் கொண்டனர். இவர்களின் ஆட்சியில் இந்தியர்கள் பட்ட துன்பம் எண்ணிலடங்காது.

மலேசியாவின் வளர்ச்சிக்கு ஆக்கச் சக்திகளாக விளங்கியவர்களின் பட்டியலில் முதன்மை இடத்தில் இருந்தவர்கள் சஞ்சிக்கூலிகளாய் வந்த இந்தியத் தொழிலாளர்கள்தான்.  இவர்கள் ரப்பர்த் தோட்டங்கள், தொடர்வண்டிச் சாலைகள் அமைத்தல் பணி, மின்சாரத் துறை, நீர் விநியோகத் துறைகளில் பெருமளவில் வேலை செய்தனர்.மலாயா நாட்டில் தமிழர்களின் கண்ணீர்க்கதை சுமார் இரண்டரை நூற்றாண்டுக்குள் தொடர்கதையாய் இருந்திருக்கின்றது. அந்த நீண்ட காலத்தில் இந்திய இரத்தத்திலும் வியர்வையிலும் தியாகத்திலும் தான் இன்றைய நவீன மலேசியா எழுந்து நிற்கின்றது என்பது வரலாறு காட்டும் உண்மை.

பல மொழிகள் பேசப்பட்ட இந்தியர்கள் மலாயாவில் பெரும்பான்மையினராக இருந்தாலும், அவர்கள் தமிழர்களாக இருந்த காரணத்தினால், இந்தியர்களின் பொது மொழியாகத் தமிழ்மொழி ஏற்றுக் கொள்ளப்பட்டது.தமிழர்களின் தியாகம், உழைப்பு என எதையும் மறக்காத சிங்கப்பூர் மற்றும் மலேஷியா இன்றும் தமிழர்க்கென கௌரவத்தை நிலைநாட்டிகொண்டிருகின்றனர்.

Comments

Popular posts from this blog

செந்தமிழின் தேனீ பாரதி

நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல...